Tuesday, June 30, 2015
India on My Platter - Book Review
Friday, December 11, 2009
பாட்டுக்கொரு புலவனுக்குப் பிறந்தநாள் இன்று!
புதுச்சேரிக்குப் போயிருக்கிறவர்களுக்குப் 'புஷ்' வண்டியைப் பற்றித் தெரிந்திருக்கும். அது ரிக் ஷா வண்டியல்ல. சில புஷ் வண்டிகளுக்கு நான்கு சக்கரங்கள் இருக்கும். சிலவற்றிற்கு மூன்று சக்கரங்களே இருக்கும். அதாவது, வண்டியின் முன்புறத்திலே ஒரு சக்கரம் அல்லது இரண்டு சக்கரம் இருக்கும். வண்டியைப் பின்னே இருந்து ஆள் தள்ளுவான். புதுச்சேரியில் புஷ் வண்டியைத் தள்ளுபவர்கள் பெரும்பாலும் ஹரிஜனங்கள் - ஆண்பிள்ளை ஹரிஜனங்கள்.
பாரதியார் வெளியே புறப்பட்டுவிட்டால், இந்த புஷ் வண்டிக்காரர்களுக்கு ஆனந்தம். பாரதியாருக்கு முன்னே வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள்;பாரதியாரை நடக்கவும் விடமாட்டார்கள்; போய்ச் சேர கூலி பேசவும் மாட்டார்கள்; கேட்கவும் மாட்டார்கள். வேண்டிய இடத்துக்குப் போனதும், பாரதியார் வாடகைப் பணம் கொடுப்பார். வாங்க மாட்டார்கள்.
"என்னாத்துக்குங்க எனக்குக் காசு" என்பான். "ரூபாய் வேணுமோ?" என்று சொல்லிப் பாரதியார் சிரிப்பார். "எதுக்குங்க ரூபாய்?" என்பான். புஷ் வண்டிக்காரனுக்குக் கட்டிக்கொள்ளத் துணி வேண்டும். வண்டிக்காரனுடைய நெளிவு பாரதியாருக்குத் தெரியும். சிறிது நேரம் சம்பாஷணைச் சல்லாபம் செய்வார். துணி வேண்டும் என்று அவன் வாயால் வரும்படியாகச் செய்வார். தாம் மேலே போட்டுக்கொண்டிருப்பது பட்டாயிருந்தாலும் சரி, கிழிந்த அங்கவஸ்திரமாயிருந்தாலும் சரி, சரிகைத் துப்பட்டாவாயிருந்தாலும் சரி, அது அன்றைக்கு புஷ் வண்டிக்காரனுக்குப் 'பிராப்தி'.
பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு கூர்ந்து யாரேனும் நண்பர் அவருக்குப் புதிய அங்கவஸ்திரம் கொடுத்தால், அதற்கும் மேற்ச்சொன்ன கதி நேர்ந்தாலும் நேரும். புதுச்சேரி புஷ் வண்டிக்காரர்கள், அதிலும் பாரதியார் குடியிருந்த வட்டத்திலிருந்த புஷ் வண்டிக்காரர்கள், கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாரதியாருக்குத் துணிப்பஞ்சம், சட்டைப் பஞ்சம் ஏற்படலாம்; அவர்களுக்கு ஏற்படாது. ஏழைகள், ஹரிஜனங்கள் என்ற காரணத்தினால் அவர்களிடம் பாரதியாருக்கு அளவு கடந்த அன்பு.
Thursday, August 6, 2009
ரமணியண்ணா...
நாம எல்லாரும் நம்ம பாரம்பர்யம், ஆச்சாரம் இதெல்லாத்தையும் விட்டுட்டு ரொம்ப சுயநலவாதிகளா ஆகிண்டு இருக்கறதுதான் முதல் காரணம். ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆவணி அவிட்டம்னா அக்ரஹாரமே 'ஜே ஜே'ன்னு இருக்கும். இப்ப மெட்ராஸ், பெங்களூர், அமெரிக்கான்னு வேலைதான் முக்கியம்னு எல்லாரும் ஊரைக் காலி பண்ணியாச்சு. யாரக்கேட்டாலும் வேலை வேலைன்னு சொல்லிண்டு வாழ்க்கைய மறந்துண்டு இருக்கோம். அக்ரஹாரத்துல இப்ப இருக்கற பத்து பேரும், ஆவணியாவிட்டம் அன்னிக்கும் வாத்யார் ஸ்வாமிட்ட, "ஒரு எட்டரை அல்லது ஒம்பது மணிக்குள்ள முடிச்சு வச்சுடுங்கோ. ஆபீஸ் போகணும்"னுதான சொல்லறோம். இன்னிக்கு ஒரு நாளாவது லீவ் போட்டு ஒழுங்கா பண்ணலாம்னா, "இல்லை தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் கூட ஒரு நாள் லீவ் போடணும். இப்ப லீவ் போட்டா, அப்ப போட முடியாது"ன்னு சொல்லுவோம். நம்பளுக்கெல்லாம் பொங்கல், தீபாவளிய விட ஆவணியாவிட்டம் கொறஞ்சு போயிடுத்தில்லியா?
ஸந்த்யாவந்தனத்த விட்டு வருஷக்கணக்காச்சு. நம்ப ப்ராமணன்னு சொல்லிக்கறதுக்கு இன்னமும் ஒரே சாட்சியா இருக்கற பூணல மாத்தற அன்னிக்காவது கொஞ்சம் சிரத்தையா செய்யலாம்லயா? அதக்கூட நம்பளால பண்ண முடியலேன்னா அப்பறம் ஏன் நாம ப்ராமணன்னு சொல்லிக்கணும்? நம்ப மந்த்ரத்தை ஒழுங்காச் சொல்லி, உபாகர்மாவை ஒழுங்கா செய்யணும்னா, அதுக்கு ஆச்சார்யாளும் முக்கியப் பங்கு வகிக்கணும். ஆவணியாவிட்டம் பண்ணி வைக்க வரும்போதே ஒம்போதரைக்குள்ள இங்க முடிச்சிட்டு ராமர் கோயிலுக்குப் போகணும்னு சொல்லிண்டே தான் வர்றார். ஷதாப்தி எக்ஸ்ப்ரஸ விட வேகமா ஓடறார். இப்படிச் சொல்லும்போதே பாதி மந்த்ரம் காதுல விழறதில்லை. காதுல விழற பாதி மந்த்ரத்தையும் நம்பளால ஒழுங்கா சொல்ல முடியறதில்லை (அவர் தான் ஷதாப்தி வேகத்துல ஓடிண்டு இருக்காறே?) வாத்யார் ஸ்வாமியையோ, குருவையோ அவமதிக்கணும்கற எண்ணம் எனக்கு நிச்சயமாக் கிடையாது. இப்படி ஒரு நிலைமை இருக்கறதுக்கும் நாம தான் காரணம். பின்ன, நம்ப கொடுக்கற பத்தையும் பதினஞ்சையும் வாங்கிண்டு அவர் குடும்பத்த நடத்த முடியுமா? ஒடம்புக்கு அடிச்சுக்கற Axe பாடி ஸ்ப்ரேக்கு மாசத்துக்கு நூத்தம்பத தாராளமா செலவழிக்கற நாம, வருஷத்துக்கு ஒரு நூறு ரூபா வாத்யாருக்குக் கொடுத்தோம்னா கொறஞ்சு போயிடுவோம்லியா? நம்ப பத்தையும் பதினஞ்சையும் கொடுத்துண்டு இருந்தோம்னா அவரும் எட்டரைக்கு பெருமாள் கோவில், ஒம்போதரைக்கு ராமர் கோவில்னு ஓடத்தான் செய்வார். அவரைக் குறை சொல்லறதுல்ல அர்த்தம் இல்ல.
அப்பறம், நமக்கும் வேதத்துக்கும் ரொம்ப தூரம். அதுக்கு காரணம் என்னன்னா, வேத மந்த்ரத்தையும், உபநிஷதத்தையும் படிச்சு புரிஞ்சுக்கணும்னா அதுக்கு ஸமஸ்க்ருதம் அவசியம். நம்பளுக்கு தமிழே சரியா வராது; ஏதோ, கம்ப்யூட்டர் புண்ணியத்துல இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சிருக்கு. ஸமஸ்க்ருதமே தெரியாம வேதத்தப் படின்னா எப்படி? ஆக மொத்தம், நம்பளால சரியா வாசிக்கவும் முடியாது, மந்த்ரத்தைச் சொன்னாக்கூட சரியா திருப்பி சொல்ல நம்பளால முடியாது. எங்கே ப்ராமணன்ல சோ சொன்ன மாதிரி, பூணல் போட்டுக்கறவாள்ளாம் ப்ராமணாளா ஆக முடியாது. ஆனா, போற போக்கப் பாத்தா, பூணல் போட்டுக்கறது கூட நமக்கெல்லாம் கஷ்டமாயிடும் போல. ப்ராமணனா இருக்கறதுங்கறது அவ்வளவு சுலபமில்லைதான். அதுக்கு ஆச்சாரத்தைக் கடைபிடிக்கணும் - ஆச்சாரத்தையெல்லாம் கடை பிடிக்கணும்கறது ரொம்பக் கஷ்டம்தான். ஆனா, அந்தக் கஷ்டம் தான், நம்ப வாழ்க்கைய நெறிப்படுத்தறது.
ஏழெட்டு வயசுல கொழந்தேள் இருக்கற பெற்றோர்க்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: மொதல்ல, அவாளுக்குப் பூணல் போடறதுக்கு முன்னாடி அவாள ஸமஸ்க்ருத்தத்த படிக்க வைங்கோ. இங்கிலீஷ், தமிழ் இதெல்லாம் நாம அன்றாடம் பேசறதுதான். ஆனா, ஸமஸ்க்ருதம்ங்கறது அப்படியில்லை. ஸமஸ்க்ருதத்தப் படிக்க வச்சாச்சுன்னா, நாம பண்ணற ஸந்த்யாவந்தனம், சொல்லற புருஷஸூக்தம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். அவாளுக்கும், நம்ப கலாச்சாரத்து மேல கொஞ்சம் ஆர்வம் பிறக்கும். நாம செய்யற எல்லாத்துக்குமே காரணம் இருக்குன்னும் புரியும். அப்படிப் புரியாத வரைக்கும், 'ரமணியண்ணா', 'மூர்த்தி மாமா' இவாள்ளாம் ஆவணியாவிட்ட மந்த்ரத்துல வந்துண்டுதான் இருப்பா.
Copyright © 2009 All rights reserved.
Tuesday, May 19, 2009
அரியும் சிவனும் ஒண்ணு!
நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா, நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு (இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன் படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம் கிடைச்சுது. ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும் அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே பெரியவர்னு ஒருத்தர் வாதாட, இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார். இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப் பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு வந்தது. நாவுக்கரசரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும் சொல்லிருக்கற பாடல்லயும் பாசுரத்துலயும் எவ்வளவு கருத்து ஒற்றுமை இருக்குன்னு பாருங்கோ!
குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுட னெடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.
- திருநாவுக்கரசர்
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவைத் தவிர யான்போய் இந்திர லோகமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே.
- தொண்டரடிப்பொடியாழ்வார்
ஒருத்தருக்கு பகவானோட மேனி பச்சைமாமலை போல இருக்கு, இன்னொருத்தருக்கோ பவளம் போல தோணறது. வாய் ஒருத்தருக்கு பவளம் மாதிரி காட்சி அளிக்கறதுன்னா இன்னொருத்தருக்கோ கோவைப் பழம் மாதிரி இருக்கு. ஆனாலும், ரெண்டு பேரோட கருத்து என்னன்னு பாத்தா, ரெண்டுமே கிட்டத்தட்ட ஒண்ணுதான். நாவுக்கரசர் இப்படி அழகான பகவான பார்த்துண்டே இருக்கலாம்னா இந்த மனுஷ பிறவியையும் விரும்பலாம்கறார். தொண்டரடிப்பொடியாழ்வாரும் தனக்கு இந்திரலோகத்த ஆளக்கூடிய பதவி வந்தாக்கூட, இப்படிப்பட்ட அழகான பகவான தரிசிக்கறதக்காட்டிலும் அது பெருசே இல்லங்கறார். ஆனா, நாம இதெல்லாம் மறந்து இன்னமும் சைவம் பெருசா, வைஷ்ணவம் பெருசான்னு சண்டை போட்டுண்டிருக்கோம்! இப்போவாவது நம்மளுக்குப் புரியுமா - அரியும் சிவனும் ஒண்ணு அறியாதார் வாயில மண்ணுன்னு?
Friday, April 17, 2009
அன்புள்ள வெட்டிப்பயல் சாருக்கு
உங்களோட ரெண்டு வருஷத்துத்துக்கு முந்தின வலைப்பதிவப் படிச்சேன்! (ஆமாம்... கொஞ்சம் லேட்டாயிடிச்சு - இப்போ எலெக்க்ஷன் டைம்ங்கறதுன்னால ஈமெயில்ல உலா வந்துக்கிட்டிருக்க்கு). மணிரத்னம் சாரோட ரோஜா, பம்பாய், ஷங்கர் சாரோட முதல்வன் அப்பறம்... இந்த ஸ்வதேஸ், சக் தே, லகான் இதெல்லாம் பார்த்த ஃபீலிங்ஸ் கெடச்சுது. ரொம்ப தேங்க்ஸ்! அமெரிக்காங்கற அழகான நாட்டுல டெய்லி ஆப்பிள் பழங்கள் சாப்பிட்டுட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வாழ்க்கைய அனுபவிச்சுட்டு இருக்குற நீங்க இந்தியாவப் பத்தியும் கவலைப்பட்டு எழுதியிருக்குற பதிவப் படிச்சுட்டு எனக்கு ரொம்பவே புல்லரிச்சிருச்சு.
வெட்டிப்பயல் சார்! இந்த நாட்டுக்கும் நீங்க இப்போ இருக்கற நாட்டுக்கும் நெறைய்ய வித்தியாசம் இருக்கு. இங்க ஒரு வேள சோத்துக்கும், ஒரு கோவணத்துக்கும் வழியில்லாம நெறைய்ய பேரு இருக்காங்க. இதெல்லாம் உங்களுக்கும் தெரியுமுன்னு எனக்கும் தெரியும். ஆனா இத ஏன் இங்க சொல்லறேன்னா இப்படி அடிப்படை வாழ்க்கைக்கே கஷ்டப்படறவங்க இருக்குற நாட்ட ஆளுறவங்க எப்படி இருக்கணும்? சரி - நாட்டுக்காக ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்கள நம்பி ஓட்டுப் போட்டவங்களுக்காவது ஏதாவது கொஞ்சமாச்சும் செய்யலாமுல்ல? தினசரி சாப்பாடு போட வேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு வேள சாப்பாடு கெடைக்கிற மாதிரி நல்ல வேலைவாய்ப்ப ஏற்படுத்தலாமுல்ல?
ஒவ்வொரு எம்.பியும் எம்.எல்.ஏவும் கோடி கோடியா வச்சுருக்கற சொத்தப் பாத்தா வயிறு எரியுது சார். ஒரு நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வீட்ட விட்டுக் கிளம்பினா ராத்திரி ஒம்போது மணி வரைக்கும் கஷ்டப்பட்டு வேல செஞ்சு சம்பாதிச்ச பணத்துக்கு கட்டின வரி சார் இது. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் இன்னொருத்தன் - அதுவும் ஒண்ணுமே செய்யாம எம்.பி, எம்.எல்.ஏன்னு சொல்லிட்டு இருக்கறவனோட பாங்க் அக்கவுன்ட்டுல டெபாசிட்டாவும் அவன் பொண்டாட்டி புள்ளைங்க கழுத்துலயும் காதுலயும் வைரமாவும் ஜொலிக்கறத பாத்தப்புறம் எப்படி சார் இந்த நாட்ட நேசிக்கத் தோணும்?
அப்புறம் என்ன சொன்னீங்க? கீழ கெடக்குற குப்பைய எடுத்து குப்பைத்தொட்டில போட மாட்டோமா? சார், நானும் பஸ்ஸுல போறப்ப வாங்குற டிக்கெட்டக்கூட கீழ போடக்கூடாது, குப்பைத் தொட்டியப் பாத்தாப் போட்டுடலாமுன்னு அதுவரைக்கும் சட்டைப்பையையே குப்பைத்தொட்டியாக்கி அதுல போடற ஆள்தான் சார். பெங்களூருக்கு வந்து பாருங்க சார்! எங்கயாச்சும் குப்பைத்தொட்டிய பாத்தா சொல்லுங்க - நான் இனிமே அங்க போயி போட்டுடறேன். சரி, அத விடுங்க! நாம ஓட்டுப்போட்டு கவுன்சிலரா ஆக்கின ஆளுகிட்டப் போயி இதப் பத்தி சொல்லலாமுன்னா அந்த ஆள எலக்க்ஷனுக்கு அப்புறம் பாக்கவே முடியறதுல்ல. அப்படிப் பாத்தாலும் அவன் சொல்லற பதில் - வீட்டு வாசலுக்கே வந்து குப்பைய கலெக்ட் பண்ண ஆள் வருதுங்கறான். ஆமாம் அவன் சொல்லறது உண்மைதான் - ஒரு எட்டு மணிக்கு குப்பையள்ள விசிலடிச்சிகிட்டு வர்றாங்க. ஏழு மணிக்கே ஆபீஸ் போற நான் எங்க சார் குப்பையப் போடறது? அவங்கள நான் குறை சொல்லமாட்டேன். தெருவோரமா ஒரு குப்பைத்தொட்டிய வைக்கலாமுன்னு தான் சொல்லறேன்.
சனி, ஞாயிறு வந்தா தூங்கறோம், ஷாப்பிங் போறோமுன்னு தான சொல்லுறீங்க? ஒரு வாரம் தூங்காத தூக்கம், துவைக்காத துணி இதெல்லாத்துக்கும் இந்த ரெண்டு நாள் தான். நம்மள கவனிக்கறத்துக்கு தான் சார் சனி, ஞாயிறு... நாட்ட கவனிக்கறதுக்கு தான் நாம ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ., எம்.பின்னு ஒக்கார வச்சுருக்கோம். அவன் நாட்ட கவனிக்காம தன்னோட பாக்கெட்ட எப்படி நிரப்பலாமுன்னு பாத்தான்னா அது இந்த நாட்டோட சாபக்கேடு. அதுக்காக அமெரிக்கால இருக்குற நீங்க எங்கள குறை சொல்லுறது கொஞ்சம் கூட சரியில்ல வெட்டிப்பயல் சார். ஓட்டுப் போடணும் ஓட்டுப் போடணும்ணு சொல்லறீங்க... பெங்களுர்லேந்து என்னோட ஊருக்கு (உங்க ஊரும்தான்) ஓட்டுப் போடப் போலாமுன்னா அதுக்கு இருக்குற ஒரே ரயில்ல டிக்கெட் இல்ல சார். அப்படியே தத்கல்ல புக் பண்ணியோ, பஸ்ஸுல போயோ வோட்டுப் போடலாமுன்னா எல்லாமே ஊழல் பேர்வழியா இருக்கும் போது யாருக்கு தான் சார் போட? அப்படியே சுயேச்சையா ஒருத்தன் நின்னு அவன ஜெயிக்க வச்சாலும் எலெக்க்ஷனுக்கு அப்புறம் நடக்குற குதிரைபேரத்துல அவனும் விலை போயிடறான் சார்!
இந்தியாவோட முதுகெலும்பு கிராமம் சார். அங்க இருக்குறவங்க பண்ணுற விவசாயம்தான் நம்மள இன்னும் உசிரோட வச்சிருக்கு. அத விட்டுட்டு பில் கேட்ஸ், ஜான் சேம்பர்ஸ் இவங்கள்ளாம் இந்தியாவுக்கு வந்துட்டா அவங்க கூட ஒட்டிக்கிட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு இந்தியாவ மென்பொருள் மையமா மாத்தி வளர்ச்சி காணப் போறோம்னு சொல்லறதுல்லாம் ரொம்ப சகஜமாயிடுச்சு. நீங்க மனசுல என்ன நெனக்கறீங்கன்னு புரியுது... 'நீயும் விவசாயம் பண்ணப் போயிருக்கவேண்டியது தானே'ன்னு தான கேக்குறீங்க? போலாம் சார்... இந்த நாட்டுல விக்கற பொருள வாங்குற அளவுக்கு வருமானம் கெடைச்சா கண்டிப்பா போலாம் சார். வரி வரின்னு நம்மளல்லாம் அரிச்சு தன்னோட சொத்த அதிகரிக்குறவங்க இருக்கறப்போ இதெல்லாம் எப்படி சார் நடக்கும்? இன்னொண்ணு தெரிஞ்சுக்கோங்க வெட்டிப்பயல் சார் - மதச்சார்பின்மையப் பத்தி வாய்கிழியப் பேசுவாங்க, ஆனா, ஓட்டுக்காக அந்த மதத்துக்கு 30% இந்த ஜாதிக்கு 29%னு இட ஒதுக்கீடு மட்டும் பண்ணிடுவாங்க! சார் தெரியாமத்தான் ஒண்ணு கேக்குறேன் - நான் வேற ஜாதிங்கறதுனால எனக்கு கடவுள் ஒண்ணும் அஞ்சு கிலோ மூளைய வைக்கல. எனக்கும் எல்லார மாதிரியும் 1.36 கிலோ தான் மூளையோட வெயிட். என்னைய விட கொறஞ்ச மார்க் எடுத்தவங்களுக்கெல்லாம் ரிசர்வேஷங்கற பேர்ல நல்ல காலேஜுல்ல ஸீட் கொடுக்கறது எந்த விதத்துல நியாயம் சார்? ஏதோ ஆண்டவன் புண்ணியத்துலயும் எங்க அப்பா அம்மா பண்ணின புண்ணியத்துலயும் 'Who moved my cheese?'ல சொன்ன மாதிரி கஷ்டப்பட்டுப் படிச்சு முன்னேறுறோம் சார்! (அதையும் கெடுக்க ப்ரைவேட் கம்பெனிலயும் ரிசர்வேஷன்னு ஒரு கோமாளித்தனத்தக் கொண்டு வரப் போறாங்களாம்).
இந்த நாட்டு மேல எனக்கு எந்த கோபமும் இல்ல சார். இந்த நாட்ட முன்னேத்துங்கடான்னு நம்பி ஓட்டுப் போடறோமே அவங்க மேலதான் சார் என்னோட கோபமெல்லாம். இவங்களால பல பிரச்சினைங்க! பாருக்குள்ளே நல்ல நாடுன்னு பாரதியார் பாடின நாடு சார் இது. இப்பக் குட்டிச்சுவராக்கிட்டாங்க! இவங்களாலேயே நாம தப்பான நாட்டுல பொறந்துட்டோமோன்னு யோசிக்க வேண்டி இருக்குது சார். புராணத்துலயும், வேதத்துலயும் பரதக்கண்டம்னு சொல்லப்பட்டுருக்கற நாடு சார் இது. இப்போ இந்த பாரதத்துக்கு உண்டாகியிருக்கற கண்டம் எப்படா முடிவுக்கு வரும்னு ஆயிடுச்சு. அட்லீஸ்ட், அடுத்த பொறப்புலயாவது நாட்டப் பத்தி, நாட்டு மக்களப்பத்தி யோசிக்கற அரசியல்வாதிங்க இருக்கற இந்தியாவுல பொறக்கணும்னு கடவுள வேண்டிக்கறேன் சார்.
நாடுன்னா மக்கள் தான்! மக்கள்ன்னா வேற யாரும் இல்ல நாம தான்... அப்ப நாட்ட ஆளுறோங்கற பேர்ல மக்கள கொள்ளையடிக்கிற கும்பல என்ன சார் சொல்ல?
நீங்க எழுதுன பதிவு மத்தவங்களுக்காகவும் உங்களுக்காகவும்னு சொன்னீங்க இல்லையா? நான் எழுதியிருக்கறது உங்களுக்கு பதில்னாலும், நான் நொந்துக்கறதுக்காக மட்டும்தான் சார் எழுதியிருக்கேன்.
அமெரிக்கால இருக்கற நீங்க இந்தியாவப்பத்திக் கவலைப்பட்டு உங்க ஒடம்ப கெடுத்துக்காதீங்க வெட்டிப்பயல் சார்.
இப்படிக்கு,
நாட்டைப் பத்தி இனிமேல் அதிகம் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத இந்திய நாட்டுக் குடிமகன்.
Sunday, March 29, 2009
Masakkali, phur, phur and Pilani...
Everytime I listen to the lyrics "puR puR puR tu hai hira pan rE" in this song, I think about nothing but Pilani. Only God knows how much my sleep was affected because of these pigeons coming and sitting right on the window atop the door early in the morning and making damn puR puR sounds. I used to have a newspaper rolled just to get them away from those windows - but those efforts were really hopeless. But, this song is another feather in both Rahman's and Mohit's crown.
Sunday, March 15, 2009
ஸ்ரீமத் பாகவதம்
மேலும் விபரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.
இக்காலத்து இளைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. இணையத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கின்றனர். சிலருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பினும் நம் தமிழ் மொழியின் பெரும் படைப்புக்களோ, நம் பாரத தேசத்துப் பெருங்காவியங்களான மஹாபாரதமோ, ராமாயணமோ அவர்கள் விரும்பும் பட்டியலில் இல்லை. அவர்கள் விரும்புவதெல்லாம்
ஹேரி பாட்டர், ஷிட்னீ ஷெல்டன் போன்றவை தான். ஆனால், இளைய தலைமுறையினரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது இந்தப் புத்தகம்.
உமா சம்பத்-ன் ஸ்ரீமத் பாகவதம்: முன் அட்டையில் கஜேந்திர மோக்ஷக் காட்சி. பின் பக்கம் திருப்பினால் கண்ணில் தென்படும் வரிகள் - "பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்! காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்!" உண்மைதான்! புத்தகத்தைத் திறந்தால் பொங்கிப் பாய்கின்றது வெள்ளம் - பாய்வது சாதாரணமான வெள்ளமில்லை; பக்தி அருட்பெருவெள்ளம். நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கி, பாவங்களைப் போக்கிடப் பாய்கின்றது 'பாகவதம்' என்னும் விஷ்ணுவின் அவதார மகிமைகளைக் கூறும் வெள்ளம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளால் உத்தரையின் கர்ப்பத்தில் அசுவத்தாமாவின் பாணத்திலிருந்து காக்கப் பெற்ற பரீக்ஷித், நொடிப்பொழுதில் இழைத்த தவறால் முனிகுமாரனிடம் சாபம் பெறுகிறான். அதை மனதார ஏற்றுக்கொண்டு தான் முக்தி பெறும் பொருட்டு வனவாசம் சென்றவிடத்தில் சுகர் மகரிஷியிடம் பகவானின் பெருமைகளைக் கூறுமாறு வேண்டுகிறான். சுகர் முனிவரும் பெருமகிழ்ச்சி கொண்டு அவனுக்கு தன் தந்தை இயற்றிய பாகவதத்தை எடுத்துரைக்கின்றார்.
இரண்டே பாகங்களில், பாகத்திற்குப் பதினாறே கதைகளில் பாகவதத்தை மிக அழகுற விவரிக்கும் உமா சம்பத் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. முதல் பாகம் மச்சம் முதல் ராமர் வரையான பகவானின் அவதாரப் பெருமைகளைக் கூறுகின்றதென்றால், அந்த மணிவண்ணணான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை இரண்டாவது பாகத்தில் உமா விவரித்ததுள்ள விதமே பக்தியில் நம்மை மெய்மறக்கச் செய்கின்றது.
மஹா பிரளயத்திலிருந்து தொடங்குகின்றது இந்த பாகவதம். சனத்குமாரர்கள் பகவானை தரிசிக்கச் சென்றபோது அவர்களை அவமதித்த த்வாரபாலகர்களே இரண்யாட்சன், இரண்யகசிபுவாகப் பிறக்கின்றனர். பூமாதேவியைப் பதுக்க முயற்சித்த இரண்யாட்சனை வதம் செய்ய வராகமூர்த்தியாகிறார் பகவான். இரண்யனை வதைத்து பூமியைக் காக்கிறார். தந்தையின் மடியில் உட்காரச் சிறு இடம் கேட்ட துருவன் அது கிடைக்காமல் போகவே விஷ்ணுவை நோக்கிச் செய்த தவம் விண்ணுலகில் எவருக்குமே கிட்டாத பதவியைப் பெற்றுத்தருகிறது. நம்பிக்கையுடன் இறைவனைத் துதித்தால் எதுவும் கைகூடும் என்பதற்கு இதைவிடவும் வேண்டுமோ சான்று? ப்ருதுவின் மகளானதாலேயே பூமிக்கு 'ப்ருத்வி' என்ற பெயர்க் காரணம் என்பதைப் படிக்கும்போது, உமா சிறு விஷயங்களில் கூட செலுத்தியுள்ள கவனம் நமக்குப் புரிகின்றது.
பக்தப் ப்ரகலாதனின் கதையை எத்தனை முறைக் கேட்டிருப்போம்? 'தூணிலும், துரும்பிலும் எதிலும் எங்கும் எப்போதும் இருப்பான் நாராயணன்' என்னும் உண்மையை உமா விவரித்துள்ள விதமே சிறப்பாக இருக்கிறது. மச்சாவதாரம், துன்பம் வரும் நேரத்தில் நல்லவர்களைக் காக்க பகவான் எப்படியும் வருவார் என்பதை விளக்குகிறதென்றால், கூர்மாவதாரமோ, பகவான் நமக்கு உதவ சரியான வடிவத்தில் வந்து உதவுவார் என்றறியச் செய்கிறது. மூன்றடி மண் கேட்டு வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்ற பெருமாளின் லீலை உமாவின் வார்த்தைகளில் தித்திக்கின்றது. பரசுராமர் கதையைப் படிக்கும்போது 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் தத்துவத்தின் அருமை புரிகின்றது. ராமன் மக்கள் மனத்திலே இடம் பிடித்துவிட்டதாலோ என்னவோ ராமாவதாரம் மட்டும் சில பக்கங்களிலேயே இடம் பெற்றுள்ளது.
ஏழு அவதாராங்களைப் பற்றி சொல்லிமுடித்த சுகர் மகரிஷி, கிருஷ்ணனைப் பற்றி சொல்லத் தொடங்குகிறார். 'ஸ்ரீகிருஷ்ணன் பரிபூர்ண அவதாரம்! அவதரிக்கும் போதே, தான் கடவுள் என்று அனைவரும் உணரும்படியாகப் பிறந்தவன்' என்று தொடங்குகிறது கிருஷ்ணாவதார மகிமை. பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கவே பிறந்தவன் அவன் என்ற தகவல் நமக்கு வியப்பைத் தருகின்றது. இரண்டாம் பாகம் முழுவதையும் கிருஷ்ண பகவான் ஆள்கிறார். வசுதேவர்-தேவகி திருமணத்திலேயே கம்சன் அவர்களது எட்டாவது குழந்தையால் கொல்லப்படுவான் என்ற அசரீரி ஒலிக்கின்றது. கலக்கமடையும் கம்சன் அவர்களுக்குப் ஆறு குழந்தைகளையும் கொல்கின்றான். பகவான் அவன் கண்ணில் மண்ணைத்தூவி ஏழாவது கர்ப்பமான ஆதிஷேஷனை வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோஹிணியின் வயிற்றிலும், தன் யோகமாயாவை நந்தகோபரின் மனைவியான யஷோதாவின் வயிற்றிலும் வளரச் செய்கிறார். பகவான் இப்படிச் செய்ததற்குக் காரணம்? முந்தைய பிறவியில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறப்பேன் என்று அளித்த வரம். திரும்பவும் ஒரு முறை கம்சன் கண்ணில் மண்ணைத்தூவி பிறந்த இரவே யஷோதையின் மகனாக மாறுகின்றார். கிருஷ்ணனை பெறாவிடிலும் வளர்த்ததனாலேயே யஷோதைக்கு தேவகியைக் காட்டிலும் மகத்துவம் அதிகம்.
பிறந்த உடனே தொடங்குகின்றது அசுரவதம். உயிர் பயத்தினால் பிறந்த குழந்தைகளையெல்லாம் கொல்ல உத்தரவிட்டிருந்தான் கம்சன். அவன் கண்ணில் பட்டனர் பகவானும் பலராமனும். கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை, சகடாசுரன், த்ருணாவர்த்தன் என தன்னைக் கொல்ல வந்த அரக்கர் ஒவ்வொருவரையும் பந்தாடுகிறான் பரந்தாமன். கண்ணன் என்றாலே நம் மனதுக்கு முதலில் வருவது வெண்ணையும் உரலும் தான். அவன் பண்ணிய சேஷ்டைகளைக் 'கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் விஷமம்' என்று உமா எடுத்துரைத்துள்ள விதமே அழகு. வெண்ணையைத் திருடித் தின்ற கண்ணனைக் கண்டிக்கும் யஷோதையிடம் தான் திருடவே இல்லை என்று உரைக்கும் கண்ணனை நம் கண்முன் நிறுத்துகின்றார் உமா. மண்ணைத் தின்ற கண்ணனைக் கண்டிக்கும் யஷோதைக்கு தன் வாய்க்குள் பிரபஞ்சத்தையே காட்டுகிறான். கண்ணன் தொல்லை தாங்க முடியாமல் போன யஷோதை அவனை உரலில் கட்டிப் போடுகின்றாள். அப்போதும் மாயக்கண்ணன் மரங்களாய் நின்றிருந்த தேவர்களுக்கு சாப விமோசனம் தருகின்றான். குழந்தைகளுக்குத் தொடர்ந்து வரும் துன்பம் தெரிந்து யாதவர்கள் அனைவரும் பிருந்தாவனத்தில் குடியேறுகின்றனர். அப்போதும் தன்னை அழிக்க வந்த அசுரர்களையெல்லாம் வதம் செய்கின்றார் பகவான். காளிங்க நர்த்தனமாடி தேவர்களை மகிழ்விக்கிறார். இப்படிக் குழந்தைப் பருவத்திலேயே கண்ணன் நடத்திய மாயைகளை நமக்கு ஆனந்தமூட்டும் வகையில் விவரித்துள்ளார் உமா.
பாலகன் கிருஷ்ணன் வாலிபனாக வளர்ந்துவிட்டிருந்தான். அதுமட்டுமா? பிருந்தாவன கோபியர்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பும் காதலாக வளர்ந்துவிட்டிருந்தது. கண்ணனின் வேணுகானத்திலேயே தங்கள் காதல் மிகுதியடைய அவஸ்தையில் தவிக்கின்றனர் கோபியர். அனைவரும் கண்ணனே தன் கணவனாக வர வேண்டும் என்று காத்யாயனி விரதம் இருந்தனர். மீண்டும் கண்ணன் ஒரு உண்மையை உலகுக்கு உணர்த்த லீலை புரிகின்றான். விரதமிருக்கும் கோபியர்கள் சாஸ்த்திரத்தை மறந்து ஆடையில்லாமல் நதியில் நீராடுகின்றனர். அவர்களின் தவறைப் புரிய வைக்க அவர்களின் ஆடைகளை எடுத்துக் கொள்கிறான் கண்ணன். விரதம் கைகூட வேன்டுமானால் தன்னைச் சரணடைந்து ஆடைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறான். மனம் காமத்தை வெண்று பரமானந்தத்தை அடைய கிருஷ்ணன் செய்த லீலை இது.
கோவர்த்தன மலையைத் தன் சுட்டு விரலில் தாங்கி யாதவர்களைக் காக்கின்றான். ராஸ நடனம், ராஸ லீலை இப்படி ஒவ்வொன்றையுமே உமா தொடுத்துள்ள விதம் மிகவும் அற்புதம். ஊடலுக்குப் பின் வரும் கூடல் தித்திக்கும் என்பதை கண்ணன் கோபியருக்கு விளக்கும் விதமே தனி. இப்படி இவ்வளவு அற்புதங்களையும் செய்துவிட்ட பிறகு துவங்குகிறது கண்ணன் அவதாரம் செய்ததின் நோக்கம். முதலில் கம்சன், பின்பு ஜராசந்தன், காலயவனன் என வதம் செய்து பூமாதேவின் பாரத்தைக் குறைக்கத் துவங்குகின்றான். இதனிடையே மலர்கிறது ருக்மணியின் காதல். பின் திரும்பவும் சிசுபாலன், பாணாசுரன் இவர்களின் வதம். முடிவாக குருக்ஷேத்திரப் போர். இப்படி கிருஷ்ணனின் அவதார நோக்கமும் நிறைவு பெறுகிறது.
இந்தப் புத்தகத்தின் சிறப்பாக நான் கருதுவது என்னவென்றால் இதன் எளிமையும், அழகுக் கோர்வையும் தான். முந்நூற்றி முப்பத்தாறே பக்கங்களில் பகவானின் அவதாரப் பெருமைகளை மிக எளிமையான மொழியில் தொடுத்துள்ள உமாவுக்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை இடை இடையே சொல்லப்பட்ட சிறு கதைகள் பாகவதத்திற்கே சுவை கூட்டுகின்றன. தேவயானி-யயதி, கஜேந்திர மோக்ஷம், பரதனின் கதை, தக்ஷனின் கதை, உத்தவ கீதை இப்படி ஒவ்வொன்றுமே எவரும் விரும்பும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் என் மனதை மிகவும் கவர்ந்தது, குசேலர் என்னும் சுதாமாவின் கதை. இறைவன் எவ்வளவு பெரிய மனதுடையவன், எவ்வளவு சிறிய பொருளையும் நாம் அன்புடன் கொடுத்தால் அதை மனதார ஏற்றுக்கொண்டு நமக்கு பலமடங்கு நன்மையைத் தருவான் என்பதைப் படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது.
இப்புத்தகம் இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் வெளிவந்துள்ளது. முதலில் சொன்ன மாதிரி ஷிட்னீ ஷெல்டனோ, டாவின்ஸி கோடோ நன்றாகத்தான் இருக்கும்; ஆனால் நம் பாரம்பரியத்தைப் போற்றும் பாகவதம், ராமாயணம் போன்ற பாரத மகாகாவியங்களும், தமிழ்ப் பெருங்காவியங்களும் அதைவிடப் பன்மடங்கு இனிமையைத் கொண்டுள்ளன. புத்தகத்தின் விலையோ ரூ.150/- தான். வாங்கிப் படித்துத் தான் பாருங்களேன்!
