Friday, December 11, 2009

பாட்டுக்கொரு புலவனுக்குப் பிறந்தநாள் இன்று!

பாரதியார் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சி - .ரா. எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகத்திலிருந்து...

புதுச்சேரிக்குப் போயிருக்கிறவர்களுக்குப் 'புஷ்' வண்டியைப் பற்றித் தெரிந்திருக்கும். அது ரிக் ஷா வண்டியல்ல. சில புஷ் வண்டிகளுக்கு நான்கு சக்கரங்கள் இருக்கும். சிலவற்றிற்கு மூன்று சக்கரங்களே இருக்கும். அதாவது, வண்டியின் முன்புறத்திலே ஒரு சக்கரம் அல்லது இரண்டு சக்கரம் இருக்கும். வண்டியைப் பின்னே இருந்து ஆள் தள்ளுவான். புதுச்சேரியில் புஷ் வண்டியைத் தள்ளுபவர்கள் பெரும்பாலும் ஹரிஜனங்கள் - ஆண்பிள்ளை ஹரிஜனங்கள்.

பாரதியார் வெளியே புறப்பட்டுவிட்டால், இந்த புஷ் வண்டிக்காரர்களுக்கு ஆனந்தம். பாரதியாருக்கு முன்னே வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள்;பாரதியாரை நடக்கவும் விடமாட்டார்கள்; போய்ச் சேர கூலி பேசவும் மாட்டார்கள்; கேட்கவும் மாட்டார்கள். வேண்டிய இடத்துக்குப் போனதும், பாரதியார் வாடகைப் பணம் கொடுப்பார். வாங்க மாட்டார்கள்.

"என்னாத்துக்குங்க எனக்குக் காசு" என்பான். "ரூபாய் வேணுமோ?" என்று சொல்லிப் பாரதியார் சிரிப்பார். "எதுக்குங்க ரூபாய்?" என்பான். புஷ் வண்டிக்காரனுக்குக் கட்டிக்கொள்ளத் துணி வேண்டும். வண்டிக்காரனுடைய நெளிவு பாரதியாருக்குத் தெரியும். சிறிது நேரம் சம்பாஷணைச் சல்லாபம் செய்வார். துணி வேண்டும் என்று அவன் வாயால் வரும்படியாகச் செய்வார். தாம் மேலே போட்டுக்கொண்டிருப்பது பட்டாயிருந்தாலும் சரி, கிழிந்த அங்கவஸ்திரமாயிருந்தாலும் சரி, சரிகைத் துப்பட்டாவாயிருந்தாலும் சரி, அது அன்றைக்கு புஷ் வண்டிக்காரனுக்குப் 'பிராப்தி'.

பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு கூர்ந்து யாரேனும் நண்பர் அவருக்குப் புதிய அங்கவஸ்திரம் கொடுத்தால், அதற்கும் மேற்ச்சொன்ன கதி நேர்ந்தாலும் நேரும். புதுச்சேரி புஷ் வண்டிக்காரர்கள், அதிலும் பாரதியார் குடியிருந்த வட்டத்திலிருந்த புஷ் வண்டிக்காரர்கள், கொடுத்து வைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாரதியாருக்குத் துணிப்பஞ்சம், சட்டைப் பஞ்சம் ஏற்படலாம்; அவர்களுக்கு ஏற்படாது. ஏழைகள், ஹரிஜனங்கள் என்ற காரணத்தினால் அவர்களிடம் பாரதியாருக்கு அளவு கடந்த அன்பு.